சமீபத்தில் பொத்தோங் பசிரில் உள்ள எளியமுறை குண்டலினி யோகா மையத்தின் வலைகுழுமத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அது முதல், மையம் சார்ந்தோர்களால் மாதாமாதம் வெளியிடப்படும் இணைய இதழ் இ-மெயில் வாயிலாக பெறும் வாய்ப்பைப் பெற்றேன். "வாழ்க வளமுடன்" என அருளும் திருமிகு. யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சார்ந்த யோகா குறித்த செய்திகள், தகவல்கள் "அருள்மலர்" என அழைக்கப்பெறும் இணைய இதழிலில் வெளியிடப்பெறுகின்றன. அவ்வாறு வெளியிடப்பெறும் இதழின் மே மாதப் பதிப்பு மிக அருமையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெளியிடப்பெற்ற "மனிதனின் சிறப்பு", எனும் தலைப்பிலான கட்டுரையை இங்கு வெளியிடுகிறேன். உங்களுக்கும், தொடர்ந்து அருள்மலரைப் பெறும் விருப்பம் இருப்பின் யோகா மையத்தின் வலைக் குழுமத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். அதன் இணைப்பை கீழே தருகிறேன்.
மனிதனின் சிறப்பு
உலகிலுள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா உயிர்களிலும் சிறந்த மேலான ஒரு இயக்க நிலை மனித உருவம். எல்லாம் வல்ல இறை நிலையை முழுமையாக எடுத்துக்காட்டும், பிரதிபலிக்கும் கண்ணாடி மனிதனே.
உடலுக்குள் உயிர், உயிருக்குள் அறிவு, அறிவுக்குள் அருட்பேராற்றலின் இயற்கை (மெய்ப்பொருள்) இவ்வாறு ஒன்றில் ஒன்றாக நிலை கொண்டு மனித உரு சிறப்பாக, வியத்தகு முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உடல் குறிப்பிட்ட அளவு பருமனால் எல்லையுடையது. உயிரானது நுண்ணியக்க மூலக் கூறான விண் எனும் நுண் துகள்கள் கோடிக்கணக்கில் ஒன்றிணைந்த ஒரு தொகுப்பாக இயங்கும் ஆற்றல். இந்த உயிரானது உடலுக்குள் சுருங்கவும், உடலுக்குப் புறத்தே தக்க அளவு விரியவும் கூடியது.
அறிவு என்பது உயிரை மையமாகக் கொண்ட மெய்ப்பொருள். உடல் மூலம் ஆற்றிய வினைகளினால் பெற்ற அனுபவம், சிந்தனை, கற்பனை இவற்றிற்கேற்ப விரிந்தும், சுருங்கியும் செயல்புரியும் ஆற்றலுடையது. அறிவில் அடங்கியுள்ள இரகசியங்கள் எண்ணியறிய முடியாதவை. எல்லாம் வல்ல முழுமுதற்பொருளான மெய்ப்பொருள் உயிராற்றலை மையமாகக் கொண்டு தனது அசைவினாலும், உணர்வாலும் ஆற்றிய வினைப்பதிவுகள் அனைத்தும் அடக்கம் பெற்ற கருவூலம் அறிவு ஆகும். இது உயிர்த்துகளின் மையத்தில் தொடங்கி உயிர்த்துகள் தற்சுழற்சியால் விளையும் ஜீவகாந்த சக்தி மூலம் உணரும் பொருட்கள் வரையிலும் மேலும் உடலுக்கு வெளியே புலன்கள் மூலம் உணரும் பொருட்கள் வரையிலும் யூகத்தால் பேரியக்க மண்டலம், அதற்கப்பால் நிலைத்த சுத்தவெளி எனக் கருதப்படும் மெய்ப்பொருள் வரையிலும் விரிந்து சுருங்கும் இயல்புடையது.
எல்லாம் வல்ல மெய்ப்பொருளே சுத்த வெளியாகவும், மெய்ப்பொருளாகவும் விண் முதல் மண் வரையிலான பஞ்ச பூதங்களின் இணைப்பால் ஆகிய பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் இயக்க ஒழுங்காகவும், உயிர்களிடத்தில் புலனுணர்வாகவும், மனிதனிடத்தில் எல்லாமுமாகவும் இருக்கும், தன் முழுமையை உணரும் பேரறிவாகவும் இருக்கிறது. இந்த நான்கு தத்துவங்களும் ஒன்றிணைந்த மாபெரும் வல்லமையுடைய அறிவிலும், செயலிலும் சிறந்ததோர் உருவம் மனிதன்.
* உங்களையும் வலைக்குழுமத்தில் இணைத்துக் கொள்ள நீங்கள் யாகூவின் இணைய இ-மெயில் முகவரி வைத்திருந்தால் அல்லது புதிதாய் ஆரம்பித்துக்கொண்டாலும் சரிதான்.
No comments:
Post a Comment